சென்னை
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவைப் பிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் டேராடூன் சென்றுள்ளனர்.
சென்னை கேளம்பாக்கம் அருகே அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா என்னும் ஆன்மீகவாதி ஆவார். இவர் அங்குப் பயிலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதையொட்டி காவல்துறையினர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
இதைத் தொடர்ந்து குழந்தைகள் உரிமை ஆணைய அதிகாரிகள் நேரடியாகப் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பள்ளி வார்டன், ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. ஆனால் சிவசங்கர் பாபா சென்னையில் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. அவர் இதய பாதிப்பு காரணமாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது சிபிசிஐட் காவல்துறை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. டேராடூனில் தங்கி உள்ளதாகக் கூறப்படும் சிவசங்கர் பாபாவைப் பிடிக்க சிபிசிஐட் காவல்துறையினர் டேராடூன் சென்றுள்ளனர். மேலும் சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லலாம் எனச் சந்தேகம் உள்ளதால் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.