சென்னை: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சிபிசிஐடி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதற்கு தடைகேட்டு நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 44 பேர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மியால், பணத்தை இழந்ததால் தனியார் வங்கி ஊழியர் உயிரை மாய்த்துக்கொண்டார். அதுபோல, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு, அவரும் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த வழக்குகள்  தொடர்பாக விளக்கம் கேட்டு, மும்பையை சேர்ந்ததனியார் விளையாட்டு நிறுவனமான கேம்ஸ் 24*7  நிறுவனத்துக்கு சிபிசிஐடி கடந்த மாதம் 24ந்தேதி  நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதுபோல  சென்னை அண்ணா நகரை சேர்ந்த ரகுவரன் மரணம் தொடர்பாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த இரு நோட்டீஸ்களையும் ரத்து செய்யவும், அவற்றிற்கு தடை விதிக்கவும் கோரி கேம்ஸ் 24*7 நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளது. அந்த மனுக்களில், காவல்துறை கேட்ட விவரங்களை வழங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், காவல்துறை உள்நோக்குடன் பொத்தாம்பொதுவாக விசாரணையை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், தாங்கள், பணம் வைத்து விளையாடும்படி யாரையும் வற்புறுத்தவில்லை என்றும், வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் தங்கள் பங்கு ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ள நிறுவனம், ரம்மி தடை சட்டத்தை தடை செய்யும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியால், விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், கடந்த 2017 ஏப்ரலுக்கு பிறகு மணிகண்டன் தங்கள் தளத்தில் விளையாடவில்லை என்றும், 5 ஆண்டுகளுக்கு பிறகே தற்கொலை செய்து கொண்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைக்காக தகவல்களை கேட்டு மட்டுமே சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ள தால், தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என  மறுப்பு தெரிவித்த நீதிபதி தமிழக அரசு, டிஜிபி, சிபிசிஐடி காவல்துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.