சென்னை:

காவிரி நதிநீர் மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கான தண்ணீர் தேவையை குறைத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில, காவிரி தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை செய்து வருகிறார்.

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 16ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில்  காவிரி நதியை உரிமை கோர எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்றும், காவிரி நீரை எந்த மாநிலமும் தனியாக உரிமை கோர முடியாது, நதி நீர் என்பது தேசிய சொத்து என்று தெரிவித்த  உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி தண்ணீரை   177.25 டி.எம்.சியாக குறைத்துவிட்டது.

இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 23 ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சியினரும், வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில்  தமிழக முதல்வர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

முதல்வருடன் நடைபெற்று வரும் ஆலோசனையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உள்பட தமிழக சட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் சட்ட வல்லுநர்களும் பங்குபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.