டில்லி, 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் தொடர் விசாரணையில், கர்நாடக அரசு சார்பான வாதம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதையடுத்து கேரளா, புதுச்சேரி வாதாட இருக்கிறது. இறுதியில் தமிழகம் வாதாடுகிறது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த 11–ந் தேதி முதல் தொடர்ந்த நடைபெற்று வருகிறது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று 7–வது நாளாக விசாரணை தொடர்ந்தது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், எஸ்.எஸ்.ஜாவளி, மோகன் கர்த்தார்க்கி, ஷியாம் திவான் ஆகியோர் வாதாடி வருகின்றனர்.

நேற்று விசாரணையின்போது,  கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் ஷியாம் திவான் வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது,

காவிரி நடுவர் மன்றம் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையே முறையான நீர் பங்கீட்டை செய்யவில்லை என்றும்,  நடுவர் மன்றத்தின் நீர் பங்கீடு எந்த வகையிலும் கர்நாடகாவின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையை தீர்க்க வேண்டிய அவசியம் கர்நாடக அரசுக்கு இருப்பதை பற்றிய முக்கியமான பிரச்சினையை நடுவர் மன்றம்   தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை என்றும், தீர்ப்பு மிகவும் பாரபட்சமான முறையில் அமைந்துள்ளது.

இந்த தீர்ப்பு காரணமாக  தமிழகத்துக்கு மட்டுமே பயன் அளிக்கும் வகையிலும், கர்நாடக மாநில மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமலும் அமைந்துள்ளது என்று கூறினார்.

மேலும், எடுத்துக்காட்டாக கூற வேண்டுமானால்,  முதல் குறுவை சாகுபடிக்கு தமிழ்நாட்டுக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யும் அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேபோல இரண்டாவது குறுவை சாகுபடிக்கும் தமிழகத்துக்கு அதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் கர்நாடகா மாநிலத்துக்கு இரண்டாவது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் போதுமான அளவில் அனுமதிக்கப்பட வில்லை. இது மிகவும் பாரபட்சமானது.

அதேபோல், கீழ்படுகையில் அனைத்து பலன்களும் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே,  காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தண்ணீரை நியாயப்படி பங்கீடு செய்வது மட்டுமே நியாயத்தை நிலைநாட்டும் செயலாக அமையும்.

இவ்வாறு  அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து இன்றும் கர்நாடகாவின் வாதம் தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் கர்நாடகா தரப்பு வாதங்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் இந்த வழக்கில் கேரளா தரப்பில் வாதாட 1½ நாட்கள்  அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு, வாரத்தில் 3 நாட்கள் (செவ்வாய், புதன், வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதுவரை கர்நாடக 7 நாட்களாக தங்களது  வாதங்களை முன்வைத்துள்ளது.

இறுதி விசாரணை 15 நாட்கள் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. இதன்படி, கர்நாடகாவுக்கு 6 நாட்கள், தமிழகத்துக்கு 6 நாட்கள, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு சேர்த்து 3 நாட்கள். ஆனால், கர்நாடகாவின் வாதம் இன்றும் தொடர்வதால் விசாரணை நாட்கள் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய விசாரணையின் போது, நீட் விவகாரமாக டில்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள்  ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர்  பார்வையாளர் பகுதியில் அமர்ந்து விசாரணையை கவனித்தனர்.