சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது/ தேர்தல் முடிந்த பிறகு வேண்டு மானால் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை நாடலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில்  கடந்த 7ந்தேதி இரவு நேரத்தில்  இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம்  ரூபாய் 4 கோடி பணம் கட்டுக்கட்டாக எடுத்துச் செல்லப்பட்டதை தேர்தல் அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். மேலும் இதை எடுத்துச்சென்ற 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், தேர்தலுக்காக இந்த பணம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு உரியது என்றும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவரது மனுவில்,  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நயினார் நாகேந்திரன் தன் மீதான வழக்கு குறித்த விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை நிராகரிக்க ஆட்சேபம் தெரிவித்தபோது விசாரணை நடத்தவில்லை. முழுமையாக பூர்த்தி செய்யப் படாத, தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய மனுவில் கோரியிருந்தார். மேலும் தனது ஆட்சேபம் மீது விசாரணை நடத்தும் வரை நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் நடவடிக்கைகள் முடியும் தருவாயில் இருப் பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். வாக்குப்பதிவை தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதேசமயம், மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தபோது, மனுதாரர் அந்த தொகுதியின் வாக்காளரோ அல்லது வேட்பாளரோ அல்ல என்பதால் தேர்தல் வழக்கை தாக்கல் செய்ய உரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து தேர்தல் முடிந்த பிறகு அவர் உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டி, அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.