சென்னை: தமிழகஅரசு, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில், கொண்டு வந்த 7.5% உள்ஒதுக்கீட்டில், தங்களுக்கும் இடம்ஒதுக்க வேண்டும் என கிறிஸ்வ மதத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், மேலும் இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தை நாடுங்கள் என மனுதாரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. ஆனால், அரசு பெறும் தனியார் பள்ளிகள், தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளன.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவ இடங்கள் கிடைக்கவில்லை என தனியார் பள்ளி மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன்தேதியிட்டு அமல் படுத்த கோரியும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்கள் கோரியும் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத மாணவர்கள் கூடுதல் இடங்களுக்கு உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூடுதல் மருத்துவ இடங்களை ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 227 இடங்களில் 26 இடங்கள் உள் ஒதுக்கீட்டின் கீழ் வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.