சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவர் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி, வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை பெற்றுள்ளது
அதனால், இந்த வழக்குகளை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை நியாயமாக விசாரிக்காது. ஆகையால், இந்த டாஸ்மாக் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என வாதிடப்பட்டது.
அதற்கு, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “ஏற்கனவே இதே கோரிக்கையுடன் கடந்த மே மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்டும், மனுதாரர் தரப்பில் இதுவரை சேர்க்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.’
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்த ரவிட்டனர். தொடர்ந்து, அதன் மீதான வழக்கு விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[youtube-feed feed=1]