ஈரோடு
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் இவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாகவும் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி மீது ஏற்கனவே 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
நேற்று முன்தினம் ஈரோடு முனிசிபல் சத்திரம் பகுதியில், வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியினர் பிரசார கூட்டத்துக்கு அனுமதி பெற்றிருந்தும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன், நாம் தமிழர் கட்சியினரிடம் இது குறிட்து அறிவுறுத்தியும், தொடர்ந்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.
எனவே அவர், இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி காவலரிடம் அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சியினர் 7 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் விதிகளை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.