மும்பை:
மும்பையில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு கார் ஒன்று தண்ணீருக்குள் மூழ்கும் வீடியோ ஒன்று இன்று மதியத்தில் இருந்து இணையத்தில் பரவி வருகிறது. பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. கார் முழுவதுமாக அந்த பள்ளத்தில் மூழ்கிவிட்டது. இணையத்தில் வைரலான இந்த வீடியோவானது மும்பையில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மும்பையின் மேற்கு பகுதியான காட்கோபரில் உள்ள ராம் நிவாஸ் சோஷைட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப்பகுதியில் இருந்த கிணற்றை கான்கிரேட் தளம் கொண்டு மூடியுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள குடியிருப்புவாசிகள் அந்த இடத்தை கார் பார்க்கிங்காக பயன்படுத்தி வந்துள்ளனர். மும்பையில் நேற்று நல்ல மழை எனக் கூறப்படுகிறது.

ராம் நிவாஸ் பகுதியில் மழை பெய்துள்ளது. அந்த கிணறு பாழடைந்த இருந்ததா அல்லது பயன்பாட்டில் இருந்தபோது மூடப்பட்டதா என அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. மழையின் காரணமாக கிணற்றில் நீர் ஊற்று எடுத்துள்ளது. இந்நிலையில்தான் அரைகுறையாக போடப்பட்ட கான்கிரீட் தளம் சேதமடைந்து அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.