சென்னை; புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ரத்து செய்து விட்டு, திமுக அளித்த வாக்குறுதிபடி, ழைய ஒய்வூதியம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து நேரடியாக குறிப்பிடாமல் வெற்று அறிக்கை வெளியிடுவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாது என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திமுக 2021ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாகக் கூறிவிட்டு, தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை அமைப்பது தவறு எனத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ, திமுக கொடுத்த பழைய ஒய்வூதியம் திட்டம் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலை யில், அதை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராயக் குழு அதிகாரிகளைக்கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அதன்படி, பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகிய மூன்று குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன்படி, திமுக கடந்த 2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திடவும் மாநில அரசின் நிதி நிலைமையையும் பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைப்பதற்காக அதிகாரிகள் குழு அமைத்தற்குத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கிறது.
கடந்த 11.01.2025 அன்று நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாது என்கிற தொனியில் 2025ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு அறிவிக்கை வெளியிட்டார்.
முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு எங்களின் கோரிக்கை பின்வருமாறு:
தற்போது அமைத்துள்ள அதிகாரிகள் குழு என்பது 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் என்ற வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.
ஆளுகின்ற அரசின் 2021-2026ன் நான்கு ஆண்டுகள் நிறைவுறும் தறுவாயில், ஐந்தாவதும் இறுதியுமான 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை தாக்கலுக்கு முன்னர் அதிகாரிகள் குழு அமைத்தது என்பது என்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.
குழு என்றாலே ஒரு விஷயத்தினை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்துவதுதான் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதுவும் அதிகாரிகள் குழுவிற்கு ஒன்பது மாத கால அவகாசம் வழங்கியிருப்பது என்பது, எந்த வகையிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாது என்பதைத்தான் தெளிவாக உணர்த்துகிறது.
இதில் மேலும், அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை தந்தது என்பது அரசின் செய்தி வெளியீட்டில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட எனத் தெரிவித்துவிட்டு, புதிய ஓய்வூதிய முறை குறித்துப் பரிந்துரைப்பது என்பது வெந்த புண்ணில் வேளை பாய்ச்சும் நடவடிக்கையாகும்.
மீண்டும் மீண்டும் அதிகாரிகள் குழு அமைப்பது என்பது முதலமைச்சர் மீதான நம்பகத்தன்மையினை முற்றாக அழித்துவிட்டது.
“உங்களது கோரிக்கைகளை மறக்கவில்லை, மறுக்கவில்லை, மறைக்கவில்லை” என்று கூறிய முதலமைச்சர், கோரிக்கைகளை மறக்கவில்லை என்பதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் கோரிக்கைகளை மறக்காமலும்-மறுக்காமலும் நிறைவேற்றாமலும் மறைத்து விட்டு, அந்தக் கோரிக்கைக்கே மறுவடிவம் கொடுத்து தற்போது அதிகாரிகள் குழு அமைத்துள்ளது என்பது, முதலமைச்சர் சொன்ன “மறைக்கல்ல” என்பதன் உள் அர்த்தத்தினை புரிய வைக்கிறது.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது 2017 முதல் 2021 வரை நாங்கள் நடத்திய போராட்டங்களில் எல்லாம் எங்களின் ஒருவராகக் கலந்து கொண்டு விட்டு, எங்களது உரிமைகளுக்காக தாங்களும் குரல் கொடுத்து, கழக ஆட்சி மலர்ந்ததும் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தாங்கள் சொன்னதை யாரும் மறக்கவில்லை. போராட்ட களத்திலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அளித்த வாக்குறுதிகளை நாங்களும் மறுக்கவில்லை. ஆனால் தற்போது மறைமுகமாக வந்துள்ள இந்த அறிவிப்பு “நீங்கள் சொன்ன மறைக்கவில்லை” என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்காகத் சாந்தா சீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பின்னர் திரு. ஸ்ரீதர் தலைமையேற்றுத் தயாரித்த அறிக்கையானது, மிகப் பெரிய போராட்டம் நடத்தி, அந்த போராட்ட வழக்கானது நீதிமன்றம் வரை சென்ற பின்னரே, தமிழ்நாடு அரசிடம் அளிக்கப்பட்டது. திராவிட மாதிரி அரசு நான்கு ஆண்டுகளாக அந்த அறிக்கையினை வெளியிடாமல் உள்ளபோது, பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த மேலும் ஒரு குழு அமைப்பது எதற்கு?
மேலும் அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவில் அதனால் பயன்பெறக் கூடிய/பாதிப்பு அடையக் கூடிய அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தரப்பிலிருந்து ஒருவரைக் கூட நியமிக்காமல் இருக்கும்போதே கண்டிப்பாக இந்தக் குழு எங்களுக்கு எதிரான பரிந்துரைகளை வழங்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை.
தமிழ்நாட்டிலே இந்நாள்வரை அமைக்கப்பட்ட எந்தவொரு குழுவின் அறிக்கையும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்கப்பட்டதில்லை. அந்த வகையில், இந்த குழுவும் கண்டிப்பாகக் கால நீட்டிப்பு கோரி காலத்தைக் கடத்தும் என்பதுதான் திண்ணம்.
ஒன்பது மாதங்களுக்குள் அறிக்கை அளித்தாலும் அதனை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தற்போதை திராவிட மாதிரி அரசிற்கு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியில் அமரப்போகும் அரசால் மட்டுமே இந்த பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க முடியும். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவதற்குக் குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. கொள்கை முடிவினை எடுத்தாலே போதும்.
2024 பாராளுமன்றத் தேர்தலின்போது, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக முதலமைச்சர் பாஜக அரசு குறித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் பொன்வரிகளான “பலரை சில காலமும், சிலரைப் பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு கூறி உள்ளனர்.