ஒட்டாவா

இந்தியா மீண்டும் கனடாவுக்கு விசா சேவையைத் தொடங்கியதற்கு கனடா வரவேற்பு தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க குற்றம் சாட்டினார்.  அதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.

இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியதன் எதிரொலியாகக் கனடா நாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

நேற்று முன் தினம் வணிகம், மருத்துவம் உள்படக் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கான விசா சேவையை மீண்டும் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.  கனடாவுக்கான விசா சேவையை மீண்டும் தொடங்கிய இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது.

கனடாவின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர்,

“கனடா பிரஜைகள் பலரின் ஒரு கவலையான நேரத்துக்குப் பிறகு, இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு நல்ல அறிகுறி. விசா சேவை நிறுத்தம் நடந்திருக்கக் கூடாது என்பதே எங்கள் உணர்வு. உண்மையில் இந்தியாவுடனான தூதரக நிலைமை பல சமூகங்களில் மிகுந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது” 

என்று கூறி உள்ளார்.