புதுடெல்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரசு ஊழியரின் மனைவியை, அந்த ஊழியர் இறந்துவிட்டாலும், குற்றத்திற்கு உடந்தையாய் இருந்தவர் என்ற வகையில் மனைவியை விசாரித்து தண்டனை வழங்குவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஒடிசா மாநிலத்தில் எலக்ட்ரிகல் சூப்பரின்டெண்டிங் இன்ஜினியராக இருந்து ஓய்வுபெற்ற ஆனந்த் ராம் பெஹெரா என்பவரின் மீது ஒடிசா விஜிலன்ஸ் துறை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே, கடந்த 2017ம் ஆண்டு ஆனந்த் ராம் மரமைடைந்துவிட்டார்.

ஆனால், அவரின் பல சொத்துக்கள் அவரது மனைவி ஆரத்தி பெஹெராவின் பெயரில் வாங்கப்பட்டுள்ளன என்கிற ரீதியில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார் அல்லது தூண்டினார் என்ற வகையில் அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டார். அவரது கணவர் இறந்துவிட்டாலும், வழக்கிலிருந்து இவரை விடுவிக்க கீழ்நீதிமன்றமும், ஒடிசா உயர்நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

எனவே, இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார் ஆரத்தி. அப்போது இவரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “முதல் குற்றவாளி இறந்துபோய், அவரின் மீதான குற்றமே நீரூபிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், அவரின் மனைவியை விசாரிப்பதென்பது எந்த வகையிலும் பொருந்தாத ஒன்று” என வாதிட்டார்.

இந்த விசித்திர வழக்கை சந்தித்த நீதிமன்றம், ஒடிசா மாநில விஜிலென்ஸ் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.