சென்னை: நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா? மத்திய அரசு, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வான, நீட் தேர்வு நடந்து முடிந்த பின் அக்டோபர் மாதம் 5 ம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.  இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தேசிய தேர்வு முகமை தளத்தில், அக்டோபர் 8 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை 700 க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17 ம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆக குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாகக் கூறியிருந்தார். அதற்கான ஸ்கீரின் ஷாட்களும் ஆதாரமாக  இணைந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையத்தின் மூலம் நீட் மதிப்பெண்ணை திரிக்க முடியும் என வாதத்திற்காக கூறினால், எண்ணற்ற மாணவர்கள் இதை செய்திருக்க கூடும்,   தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியதுடன், இது நீட் தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தர விட வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி,  இந்த வழக்கில், சைபர் குற்றங்களை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை(Special investigation team) அமைக்கலாமா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஆனால், அதற்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், அதுபோல புலனாய்வு குழு அமைக்கப்பட்டால், தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமும் தன் பங்குக்கு அவர்கள் பிரதிநிதிகளை நியமிக்க கோருவார்கள், அதனால், தேசிய தகவலியம் மையம் ( National informatics centre) இந்த விவாகரங்களில் கைதேர்ந்தது என்பதால் அவர்கள் இதனை விசாரிக்கட்டும் எனவும், அவர்கள் சுதந்திரமான அமைப்பு என்பதால் இதில் மத்திய அரசின் குறுக்கீடு ஏதும் இருக்காது என தெரிவித்ததுடன்,  னுதாரர் வைக்கும் குற்றச்சாட்டு அனைத்தும் அனுமானத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதெனவும் வாதிட்டார்.

வழக்கில்  தேசிய தேர்வு முகமை (National testing agency ) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட முடியும் எனவும் இந்த வழக்கில் அப்படி ஏதும் முகாந்திரம் இல்லை என்றும், ரசாயண முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓ.எம்.ஆர் தாளின் திருத்தம் செய்யவோ, ஏற்கனவே எழுதிவற்றை அழிக்கவோ முடியாதெனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது இந்த நிறுவனத்தின் மீதும், கட்டமைப்பின் மீதும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கன் விசாரணை  பிப்ரவரி 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.