பாலிகஞ்ச்

பீகார் மாநிலத்தில் திடீர் என பிரசார மேடை சரிந்த நிலையில் ராகுல் காந்தி காயமின்றி தப்பி உள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி பீகார் மாநிலம் பாடலிபுத்திரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி பாலிகஞ்ச் பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரசாரப் பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள் ஏறியபோது, பாரம் தாங்காமல் மேடையின் மையப்பகுதி சற்று உள்வாங்கி சரிந்தது. எனவே ராகுல் காந்தி, மிசா பாரதி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் தடுமாறினர். இதையொட்டி அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்திக்கு உடனிருந்த சிறப்பு பாதுகாப்பு குழுவினர் மற்றும் பாதுகாவலர்கள் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளிக்க முயன்ற போது அவர் நிலைமையை சமாளித்து தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கூறி, தொண்டர்களை நோக்கி சைகை காட்டினார்

அப்போது மிசா பாரதி ராகுல் காந்தியின்கைகளை பிடித்தபடி மேடையின் மறுபக்கம் சென்றபோது மீண்டும் மேடை சரிந்தது.

ஆயினும், அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தேஜஸ்வி யாதவுக்கு மூட்டு பிரச்சினை இருந்ததால் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்றனர்.  தலைவர்களின் பாதுகாப்பு கருதி மேடையில் சில பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் பிரசாரக் கூட்டம் தொடர்ந்தது.