சென்னை: ஒன்றியஅரசு என அழைக்கக்கூடாது, மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும், மக்கள் அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மோடி அரசுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார். மேலும்,  ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக துணைஒருங்கிணைப்பாளருமான, எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் ஜெயக்குமார் உள்பட 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,

நான் முதல்-அமைச்சராக  இருந்த கால கட்டத்தில் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. அனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையோ பரிசோதனைகளின் எண்ணிக்கையோ போதாது.

கடந்த ஆட்சியில் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நோய் பரவல் அதிகரிக்கிறது. அதேபோன்று கடந்த ஆட்சியில் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறியும் சோதனைகள் நடைபெற்றது. நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே பரிசோதனை நிலையங்கள் 277 அமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது 269 இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இது போதாது பரிசோதனை மையத்தை அதிகரிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் கொரனோ பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டது. கொரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரித்து உள்ளதால் பரிசோதனை அதிகரிப்பது அவசியம்.

இந்த முறை பொதுமக்களை சந்தித்து நோய் அறிகுறிகள் இருப்பவர்களின் கணக்குகள் எடுக்கபடவில்லை என்ற தகவல்கள் வருகிறது. அதுபோல, கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க 3 முதல் 4 நாட்கள் ஆவதாகவும், ஒரே நாளில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசியை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

மத்தியஅரசை இதுவரை மத்தியஅரசு என்றுதான் அனைவரும் அழைத்து வருகின்றனர். ஆனால், தற்போது தமிழகஅரசு ஒன்றிய அரசு கூறி வருகிறது.ம த்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும், மக்கள் அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர் என்றார்.

டெல்டா மாவட்டங்களுக்கு செல்கின்ற போது அந்த பிரச்சாரக் கூட்டத்திலேயே கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்ற கருத்தை நான் வலியுறுத்திக் குறிப்பிட்டேன்.

அது மட்டுமில்லாமல் திட்டம் நிறைவேற்ற வேண்டும் ஆந்திர முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசிய இருக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்து கோதாவரி- காவிரி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இது வரலாற்று சிறப்புமிக்க திட்டம், தமிழ்நாடு நீர் பற்றாக்குறை உள்ள  உள்ள மாநிலம், டெல்டா விவசாயிகளுக்கும், குடிப்பதற்கும் முழுமையான நீர் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் கோதாவரி -காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

சசிகலா அதிமுகவில் இல்லை, அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து விட்டார். ஆனால், அவரது ஆடியோவை வெளியிட்டு, வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்கின்றனர். அமமுகவினருடன் தான் அவர் பேசி வருகிறார்.  இன்று அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இதில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது

சென்னையில் புது வீட்டுக்கு இடம் பெயர்ந்ததால் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடைபெறவில்லை

சில விவகாரங்களில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பதில் கூற வேண்டியிருக்கும். சில விவகாரங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவர் சில பதில்களை தெரிவிப்பார். இது அவ்வளவு தானே ஒழிய, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

அம்மாவின் ஆட்சி காலத்திலேயே அமைச்சர்கள், நிர்வாகிகள், அவர்கள் தொடர்புடைய விஷயங்களுக்கு அறிக்கையின் மூலம் பதிலளித்த சம்பவங்கள் உண்டு. அப்போதெல்லாம் கேள்வி எழவில்லை. இப்போது வேண்டுமென்றே இது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.