சென்னை,

ன்று நடைபெற்ற 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அதன்படி திட்டமிட்டபடி பஸ் ஸ்டிரைக் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

வரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தற்போது இன்று 4வது கட்ட பேச்சு வார்த்தை  போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நடைபெற்றது.

பேச்சு வார்த்தை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவை தொகை ஏற்கனவே அறிவித்த 500 கோடி ரூபாயை  அதிகரித்து  ரூ.750 கோடி விரைவில் வழங்கப்படும் என்றும், தொழிற்சங்கத்தினர் நல்ல முடிவு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால், தொழிற்சங்கத்தினர் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும், திட்டமிட்டபடி வரும் 15ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயங்காது என்றும் அறிவித்து உள்ளனர்.