சென்னை:
வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள், விமான கட்டணத்தைவிட அதிகமாக வசூல் செய்து பயணிகளை திண்டாட வைக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆயுதபூஜை, முகரம் உள்ளிட்ட பண்டிகைகளை அடுத்து நாளை (08.10.2016) சனிக்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு அரசு விடுமுறை வருகிறது.  ஆகவே சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் – குறிப்பாக வடக்கு மற்றும் தென் மாவட்ட மக்கள் – தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறார்கள்.

ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு முடிந்துவிட்டது. சிறப்பு ரயில்களிலும் இடம் இல்லை. விடுமுறை தினத்துக்கு ஏற்றவாறு அதிக பேருந்துகளை அரசு போக்குவரத்கு கழகம் இயக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனால் வெளியூர் செல்லும் தனியார் (ஆம்னி) பேருந்துகளை நாட வேண்டிய நிலை.
பயணிகளின் இக்கட்டான சூழலை பயன்படுத்திக்கொள்ளும் ஆம்னி பேருந்துகள், கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டன. சென்ை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பகிரங்கமாகவே கூவி  கூவி அதிக கட்டண வசூல் நடக்கிறது.
இதுகுறித்து பயணிகள் ஆதங்கத்துடன் தெரிவிப்பதாவது:
“வழக்கமாக, சென்னையிலிருந்து தேனி  செல்ல, ஏசி வசதி இல்லாத பேருந்து கட்டணம் ரூ.500 முதல்  600 வரை மட்டுமே. ஆனால் தற்போது 2000 முதல் 2300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை செல்ல  2600 கட்டணம் வசூலிக்கிறார்கள்.   விமானத்தில்  மதுரை செல்ல .1,700 ரூபாய்தான் கட்டணம். இவர்கள் அதைவிட 900 ரூபாய் அதிகமாக வசூலிக்கிறார்கள்” என்று பயணிகள் புகார்  தெரிவிக்கிறார்கள்.
“அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சமீபத்தில் அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு என்ன ஆனது என்று தெரியவில்லை” என்றும் பயணிகள் புலம்புகிறார்கள்.