புதுடெல்லி: நாடு முழுவதிலுமுள்ள தனது நிலம் சார்ந்த சொத்துக்களை விற்பனை செய்வதற்கான செயல்முறையை துவக்கியுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்த சொத்தின் மொத்த மதிப்பு ரூ.20,000 கோடி என்று கூறப்படுகிறது.

முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் மூலமாக இந்த நில விற்பனை செயல்பாடு தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள், மொபைல் கோபுரங்கள் மற்றும் ஃபைபர் நெட்வொர்க்குகள் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட காலஅளவிற்குள் விற்பனை செய்வதன் மூலமாக திரட்டப்படும் நிதியாதாரத்தின் மூலமாக, தற்போது அந்நிறுவனத்தில் நிலவும் கடுமையான நிதிச் சிக்கல்களை களைய முடியும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாடெங்கிலும் இருக்கும் ஒட்டுமொத்த நிலத்தின் (கட்டமைப்புகள் அடங்கிய மற்றும் கட்டமைப்புகள் இல்லாத) அளவு 32.77 லட்சம் சதுர மீட்ர்கள். இவற்றில், சாதாரண நிலத்தின் அளவு மட்டும் 31.97 லட்சம் சதுர மீட்டர்கள். இந்த சாதாரண நிலத்தின் பண மதிப்பு மட்டும், கடந்த 2015ம் ஆண்டின் நிலவரப்படி ரூ.17397 கோடிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.