நாகர்கோவில்: ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 30 பேரை  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி பிரிட்டிஷ் கடலோர காவல்படையினர்  கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை இலங்கை கடற்படையினர் மட்டுமே இதுபோன்ற அன்டூழியங்களை செய்து வந்த நிலையில், தற்போது பிரிட்டிஷ் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். குறைந்த பட்சம் 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை கடலிலேயே தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வாடிக்கை. அதுபோல,   கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து சின்னத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த சைமன் பாஸ்டினுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர், ரவிபுத்தன் துறையை சேர்ந்த 28 மீனவர்களும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்களும் திருவனந்தபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் என 32 மீனவர்கள்  ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, கடந்த 27-ந்தேதி அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்த பிரிட்டிஷ் கடலோர காவல்படையினர், தமிழக மீனவர்கள்  எல்லைதாண்டியதாக கூறி  32 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும்   சிறைபிடித்தனர். பின்னர், அவர்களையும், படகுகளையும், இந்திய பெருங்கடலில் இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான டீகோ கார்சியா தீவு பகுதிக்கு கொண்டு சென்று கைது செய்து,  அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான தகவல் தற்போதுதான்  குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து , அவர்கள் குடும்பத்தினர், டீகோ கார்சியா தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகுமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி பிரிட்டிஷ் கடற்படையினர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது