சென்னை; காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெற மதுபான ஆலைகள் மறுப்பு தெரிவிக்கின்றன, அதனால் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில் சிரமம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்த திட்டம், 10 மலைப்பகுதி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த வழக்கின் விசாரணையின்போது,  டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மலைப்பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 88 லட்சம் மதுபாட்டில்களில் 74 சதவீத பாட்டில்களான 52 லட்சம் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மலைப் பகுதிகளில் ஏழு, எட்டு கடைகள் மட்டுமே இருக்கும் என்பதால் அங்கு இத்திட்டத்தை அமல்படுத்துவது எளிது

ஆனால், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது சிரமம் என்றும்,  டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களில் மது அருந்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பாட்டில்களை திதும்பப் பெறப்படும் நிலையில், கடையில் மதுபானத்தை வாங்கிச் சென்று வேறு இடங்களில் மது அருந்தும் பட்சத்தில் அந்த பாட்டில்களை திரும்பப் பெறுவது சிரமம் எனக் குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தில் உள்ள 11 மதுபானம் & 7 பீர் உற்பத்தியாளர்கள் கழுவப்படாத காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெற மறுத்து வரவதாகவும், அது தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என கூறியிருப்பதாக தெரிவித்த அரசு வழக்கறிஞர், காலி பாட்டில்களை பிரித்து உற்பத்தியாளர்களிடம் ஒப்படைக்க தனி நெட்வொர்க் பல ஆண்டுகளாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  ஒரு நாளைக்கு எத்தனை பாட்டில்கள் விற்கப்படுகின்றன என்றார், அதற்கு, மாதம் 51 கோடி பாட்டில்கள் விற்கப்படுவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். இந்த 51 கோடி பாட்டில்களை திரும்பப் பெறாவிட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்த அரசின் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.