கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள புளூ நைல் ஹோட்டல் ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகும். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம், இங்கே தங்கினார் தற்போது மறைந்துவிட்ட அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் டியகோ மாரடோனா.

மாரடோனா வருவதற்கு முன்பாக, அவரின் குழுவினர், கண்ணூர் வந்தடைந்து, அங்குள்ள ஹோட்டல்களை ஆய்வு செய்தனர். இறுதியில் அவர்கள் தேர்வு செய்தது புளூ நைல் ஹோட்டலைத்தான். தங்கள் ஹோட்டலுக்கு வரப்போகும் விஐபி விருந்தினர் மாரடோனா என்பதை அறிந்த அதன் உரிமையாளர் வி.ரவீந்திரன், மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஏனெனில், அவர் கால்பந்து ரசிகர் மட்டுமல்ல, மாரடோனாவின் தீவிர ரசிகரும் கூட. மாரடோனாவுக்கு 309 எண் கொண்ட அறை தேர்வுசெய்யப்பட்டது.

அங்கிருந்து மாரடோனா சென்ற பிறகும்கூட, அவர் பயன்படுத்திய தட்டுகள், ஸ்பூன்கள், பெட் ஷீட்கள், பாத்ரூம் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துவைத்து, அவற்றை அந்த அறைக்குள்ளேயே கண்ணாடி பெட்டகங்களுக்குள் பாதுகாத்து வைத்தார் ரவீந்திரன்.

அந்த அறையை, மாரடோனா தங்கிய சிறப்பு அறை என்று அறிவித்து, வாடகைக்கும் விட்டார். இதனையறிந்த மாரடோனா ரசிகர்கள், மாதம் ஒன்றுக்கு சிலர் வீதம், அந்த ஹோட்டலுக்கு வருகை தந்து, அந்த அறையில் தங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறை, மாரடோனா மியூசியமாகவும் செயல்பட்டு வருகிறது.

மாரடோனா இறந்ததையடுத்து, தனது ஹோட்டலில், அவரின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார் ரவீந்திரன்.