பெங்களூரு:
கர்நாடகாவில் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று பாஜக கூறுவது கனவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறி உள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் பொதுமக்கள் திரளாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
பதற்றமாக அறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஒருபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மற்றொரு புறம் கோவில்களையும், சாமியார்களையும் நாடிச் சென்று வெற்றிபெற வேண்டிய ஆசி வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று, பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார்.
மேலும், பாஜ 150 இடங்க பெற சாத்தியமில்லை என்றும், 60-70 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்றும், அவர்கள் ஆட்சி அமைப்போம் என்பது கனவுதான் என்றும் தெரிவித்தார்.