மும்பை:

மாற்றுக்கட்சிகளில் இருந்து வெளியேறியவர் பாஜகவில் இணைவதால், பாஜக கப்பல் துரோகி களால் நிரம்பி வழிகிறது, அது விரைவில் மூழ்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் சவான் கடுமையாக சாடியுள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாற்றுக்கட்சிரை வளைக்க பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு, தேசியவாத காங்கிரசின்  எம்எல்ஏக்கள் 3 பேர், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் என 4 பேரை  பாஜக தனது முகாமுக்கு இழுந்தது. இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித்தலைவரான  ராதாகிருஷ்ண விகே பாட்டீல் (காங்கிரஸ்) பா.ஜனதாவில் இணைந்து, மந்திரி பதவி பெற்றார்.

இந்த நிலையில், தொடர்ந்து தங்கள் கட்சியினரை இழுத்து வரும் பா.ஜனதாவை மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் சவான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின் நடவடிக்கை குறித்து விமர்சித்துள்ள சவான்,  நிரம்பி வழியும் கப்பல் என்னவாகும்…. அது  மூழ்கிவிடும்.  அதுபோல தான் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை இழுத்துக்கொள்ளும் பா.ஜனதாவும், தற்போது பாஜக கப்பலில்  சந்தர்ப்பவாதிகளும், துரோகிகளும்  நிரம்பி வழிகிறார்கள். இந்த கப்பல் மூழ்கி விடும். இது உறுதி என்று கடுமையாக சாடி உள்ளார்.

மேலும்,  சந்தர்ப்பவாதிகள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளதால் காலியான இடங்களுக்கு திறமை வாய்ந்தவர்கள் நிரப்பப்படுவார்கள் என்றும்,  காங்கிரசின் உண்மையான பலம் தொண்டர்கள் தான். அது கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்களால் அல்ல என்றும் கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.