மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை ஆண்டுவந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ள நிலை யில், புதிய ஆட்சி அமைக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நேற்று இரவு ராஜினாமா செய்து விட்டதை, பாஜகவின் வெடிவெடித்து கொண்டாடி வருகின்றனர். தேவேந்திர பட்நாவிசுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் மொத்த எம்எல்ஏக்கள் 55 பேர். இவர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கடந்த இரு ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்தார். இவரது ஆட்சியில் கூட்டணி கட்சியினரால் அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்தாலும், அதை சமாதானப்படுத்தி ஆட்சி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், 39 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநருக்கு கடிதம் எழுதினர்.  இதையடுத்து,  முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவின் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கிலும், உச்சநீதிமன்றம், பெரும்பான்மையை நிரூபிக்க  வேண்டும் என உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிட்டது.  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என்பதால், உத்தவ் தாக்கரே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவரது தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து,  சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க உரிமை கோர பாஜக திட்டமிட்டிருக்கிறது.

பாஜக சார்பில் அதன் மூத்த தலைவரான தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இதனால் மாநிலம் எங்கும் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு முன்பு தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, ஃபட்னாவிஸ் நேற்று இரவு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், “நான் மீண்டும் வருவேன். புதிய மகாராஷ்டிராவை உருவாக்க நான் மீண்டும் வருவேன். ஜெய் மகாராஷ்டிரா” எனக் கூறியுள்ளார். இதனால் அவர் 3வது முறையாக மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் வழங்கப்பட இருப்பதாகவும் மும்பையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.