மும்பை

மும்பையில் பாஜகவினர் கனடா பாடகர் ஷூப் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியின் சுவரொட்டிகளை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இந்து மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது, தூதரக அதிகாரிகளை மிரட்டுவது எனத் தொடர்கின்றனர். இந்தியா தரப்பில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்தினார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கனடாவைச் சேர்ந்த பாடகர் ஷுப் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகளை பாஜகவின் இளைஞரணியினர் (பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா) அகற்றி எதிர்ப்பை தெரிவித்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி உள்ளது.  கனடா பாடகர் ஷுப் காலிஸ்தான் ஆதரவாளர் என்பதால் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் தஜிந்தர் சங் திவானா,

“நம் நாட்டில் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரியான காலிஸ்தானிகளுக்கு இடமில்லை.எனவே  மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜின் புண்ணிய பூமியில் கனடா பாடகர் ஷுப்பை இசை நிகழ்ச்சி நடத்த விடமாட்டோம். அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவிப்போம்.” 

என்று தெரிவித்துள்ளார்.