டெல்லி

பாஜக மேலவை உறுப்பினர் சுசில் மோடி தாம் நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது 72 வயதாகும் சுசில் மோடி பீகார் அரசியலில் தீவிரமாக இருந்தார் என்பதும், 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் வாழ்க்கையில் அவர் மாநிலத்தின் துணை முதல்வராகவும், மாநில நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுசில் மோடி, தான் கடந்த 6 மாதங்களாகப் புற்று நோயால் அவதியுற்று வருவதாகவும், இதனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில்,

“கடந்த 6 மாதங்களாக நான் புற்றுநோயுடன் போராடி வருகிறேன். இதனை இப்போது மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று உணருகிறேன். இந்த மக்களவைத் தேர்தலில் என்னால் போட்டியிடவோ, பிரசாரத்தில் பங்கேற்கவோ முடியாது. இவை அனைத்தையும் பிரதமரிடம் நான் தெரிவித்து விட்டேன். எப்போதும் நாட்டுக்கும், பீகார் மாநிலத்துக்கும், கட்சிக்கும் நன்றியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பேன்”

எனப் பதிவிட்டுள்ளார்.