டில்லி

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தரம்பிர் சிங் லிவிங் டுகெதர் குறித்துப் பேசியது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தொடக்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடர், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் முக்கிய கூட்டத்தொடர்களில் ஒன்று என்பதால் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.  கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல பிரச்சினைகளை எழுப்பி வரும் நிலையில், பாஜக பலவித திட்டங்களை வகுத்துள்ளது.

நேற்று மக்களவையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தரம்பிர் சிங் லிவிங் டுகெதர் உறவு குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது தரம்பீர் சிங், லிவிங் டுகெதர் உறவை ஒரு ஆபத்தான நோய் என்றும், அதற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும் லிவிங் டுகெதர் போன்ற நோய் சமூகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் காதல் திருமணம் குறித்த கேள்விகளையும் எழுப்பினார். பெரும்பாலும் காதல் திருமணங்கள் தான் விவாகரத்தில் முடிகிறது என்றும் திருமணம் போன்ற விஷயங்களில் மணமக்களின் பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றும் கூறினார்

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தரம்பீர் சிங் லிவிங் டுகெதர்  மற்றும் காதல் திருமணங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.