சோன்பத்ரா

பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஆக இருப்பவர் ராம்துலார் கோந்த். கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. கோந்த் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். கடந்த 12-ம் தேதி அன்று அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதனால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது., அவர் 2 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை பெற்றுள்ளதால் மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி தனது சட்டமன்ற உறுப்பினர். பதவியை இழந்துள்ளார்.