சென்னை: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால்,  நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

 நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன் தினம் (டிசம்பர் 13ந்தேதி)  பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளதுடன், பாதுகாப்பு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளன.

இந்த நிலையில், நேற்றை அமர்வன்போது,  நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட க திமுக எம்.பி.க்கள், காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த 15 பேர் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவையில் அமளியில் ஈடுபட்ட கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் மக்களவையில்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதே போல், மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவரும், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில்,, இன்று காலை மக்களவை தொடங்கிய சில நொடிகளிலே எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல், மாநிலங்களவையிலும் அமளி நிலவியதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.