சென்னை:  பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன், பதிவாளர் உதவியுடன் ரூ.100 கோடி அளவில் மோசடி நிலப்பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியான நிலையில், அந்த பதிவை ரத்து செய்வதில் தமிழ்நாடு அரசு அக்கறை காட்டவில்லை,  அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி உள்ள  அறப்போர் இயக்கம், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது என்று நினைவூட்டி உள்ளதுடன், நடவடிக்கை எடுக்கும் வரை அறப்போர் தொடரும் என தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நைனார் நாகேந்திரன். இவர் ஏற்கனவே அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர். இவருக்கு திருநெல்வேலி உள்பட பல இடங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவரது  மகன் பாலாஜி. இவரது பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன.  இவர் (பாலாஜி) மற்றும் இளையராஜா ஆகியோர் ராதாபுரம் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் செய்து கொண்ட விற்பனை ஒப்பந்தப் பதிவை பதிவுத் துறை நிறுத்தி வைத்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஆவணப் பதிவை ரத்து செய்யக் கோரி, அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. இதுதொடர்பான  ‘ கடந்த  ஏப்ரல் மாதம் 12ந்தேதி  வெளியிடப்பட்ட  அறிக்கையில், பத்திரப்பதிவு துறையில் நில மாபியா, MLA நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆர்காட் ரோடு கிட்டத்தட்ட ரூ 100 கோடி சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர், சென்னை காவல்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு அனுப்பி உள்ளோம்.

மதுரை என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முக்கிய இடங்களில் ஒன்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். சொக்கிகுளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தில் சுமார் 1.8 ஏக்கர் நிலத்தை அபகரிக்க மோசடி பதிரபதிவுகளில் ஈடுபடுகின்றார் இளையராஜா என்னும் நபர்.

10 நபர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை தங்களுடைய நிலம் என்றும் இந்த நிலத்தை விற்கவும், விற்கும் பணத்தை பெற்று கொள்ளவும் பொது அதிகார பத்திரத்தை இளையராஜா மற்றும் அனிஷ் என்பவர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்கின்றனர்.

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள இந்த நிலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திருநெல்வேலி முரப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் 02/07/2021 அன்று பொது அதிகார பத்திர பதிவு செய்கிறார்கள். இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பெயர் அனந்தராமன்.

மேலும் அதே ஜூலை மாதம் இந்த கோவில் நிலத்தை குடும்ப செலவுக்காக இளையராஜா மற்றும் அனிஷ் சேர்ந்து அடகு வைப்பதாக பழனியில் உள்ள வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 19/07/2021 அன்று பதிவு செய்கிறார்கள். இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பெயர் பிரஷாந்த் சந்தான கருப்பன்.

இதில் இவர்கள் யாரிடம் அடகு வைக்கிறார்கள் என்று பார்த்தல் , இளையராஜா குடும்ப செலவுக்காக அவருடைய மனைவி கவிதாவிடமே 15 லட்சம் ரூபாய்க்கு அடகு வைப்பதாக பத்திரப்பதிவு செய்கிறார் மற்றும் அனிஷ் அவருடைய தந்தை பிரகாசிடமே அடகு வைப்பதாக பதிவு செய்கிறார்கள். அதாவது கோவில் நிலத்திற்கு அடுத்தடுத்து பல பத்திரப்பதிவு உருவாக்குவதற்காக இதை செய்கிறார்கள்.

இதெல்லாம் மோசடி பத்திரபதிவு என்று மாவட்ட தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு. IG பத்திரபதிவு 29/06/2022 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார். அதில் தெளிவாக ஏன் இந்த பத்திரப்பதிவு மோசடி பதிவு என்று குறிப்பிடுகிறார். நிலத்தை பதிவு செய்யும் முன்னர் முதலாவதாக இந்த நிலம் அரசு நிலமா, நீதிமன்ற தடை உள்ளதா அல்லது வக்ப் போர்டு நிலமா அல்லது கோவில் நிலமா என்று பார்க்க வேண்டும். ஆனால் அதை சரிபார்க்கபடவில்லை.

இரண்டாவது பத்திரப்பதிவு சட்டத்தின் விதி 28 மீறப்பட்டு உள்ளது என்று குறிப்பிடுகிறார்.இந்த விதிமீறலை வைத்து தான் பத்திரப்பதிவு துறையில் பல மோசடிகள் செய்யப்படுகிறது.

விதிபிரிவு 28இன் படி ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட நிலத்தை வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது. மேலும் ஒருவருடைய நிலம் இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தால் அதனை ஏதேனும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் இந்த இரண்டு நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே முக்கிய விதி. ஆனால் மேலே பதியப்பட்ட இரண்டு நிலங்களிலும் அப்பட்டமாக இந்த விதிமீறல் செய்யப்பட்டு உள்ளது இங்கு தெளிவாகிறது.

இவ்வாறு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை மோசடியாக பதிவு செய்தபின் இளையராஜா மேலும் ஒரு மோசடி பத்திர பதிவை பெரிய அளவில் செய்ய களமிறங்குகிறார். சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிய திட்டமிடுகிறார்கள்.

விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலம் பல சர்ச்சைக்குள் சிக்கி உள்ளது. பலர் இது எங்களுடையது என்று அதற்கு உரிமை கோருகின்றனர். 2006 ஆம் ஆண்டு சரஸ்வதி என்றவருடைய பெயரில் பட்டா உள்ளது என்றும் அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்றுள்ளார். பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகபிரிவினை பத்திரத்தை பதிவு செய்கிறார்கள். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா city civil நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இன்றைய தேதி வரை இந்த வழக்கு நடந்து கொண்டு உள்ளது.

பத்திரபதிவு  ஐஜி, ஜூன் 2022 அன்று மேற்கண்ட சுற்றறிக்கையை வெளியிட்ட அடுத்த மாதமே, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும், BJP கட்சியை சேர்த்த MLA நயினார் நாகேந்திரன் அவருடைய மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை பதிவு செய்கிறார்கள்.

வேறொருவர் அதாவது வசந்தா மற்றும் சுந்தர மகாகிங்கம் பெயரில் உள்ள நிலத்தை ஒப்பந்தம் போட இளையராஜா வந்த பொழுதே அவர் பெயர் பட்டாவில் இல்லை மற்றும் முந்தைய பதிரப்பதிவுகளில் அவர் பெயர் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும் . மேலும் பிரிவு 28 ஐ மீறி சென்னை நிலத்தை திருநெல்வேலியில் பதிய முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும் . ஆனால் சார்பதிவாளர் சரவணமாரியப்பன் ஜூலை 2022 இல் பத்திரப்பதிவு செய்கிறார். சென்னை மெட்ரோ ரயில் இந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தில் நைனார் பாலாஜி 46 கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்றும் முன்பணமாக 2.5 கோடி கொடுத்துள்ளதாகவும் அதில் 50 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளளார். இந்த மோசடி பத்திரப்பதிவு மற்றும் பண பரிவர்த்தனைகள் கிரிமினல் விசாரணைக்கு உள்ள்லாக்கப்பட வேண்டும்.

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி பதிவு செய்த இளையராஜா, தானே தான் இந்த நிலத்திற்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜன்ட் என்றும் இந்த நிலம் குலாப்தாஸ் நாராயண் தாஸ் ஆகியவர்களின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது என்றும் கூறி இந்த 1.3 ஏக்கர் நிலத்தை திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பாஜக கட்சியை சேர்த்த நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஜூலை 2022இல் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த முறைகேட்டில் அதிரடியாக களமிறங்கிய வருவாய் துறை நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தின் பட்டாவை சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இருந்து, 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலும், 1944 ஆம் ஆண்டு சென்னையிலும் இறந்த குலாப்தாஸ்கு நாராயணதாஸ் அவரின் பெயருக்கு ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு பட்டா மற்றம் செய்து அதிரடிகாட்டி உள்ளனர்.

இவ்வளவு பெரிய மோசடி பத்திர பதிவு உயர் அதிகரிககுக்கு தெரியாமல் நடந்ததா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் மாவட்ட சார்பதிவாளர் தணிக்கையில் இந்த மோசடி பதிவு சிக்கியதா என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. முக்கியமாக இதில் குலாப்தாஸ்கு நாராயணதாஸ் 1946 இல் மகாராஷ்டிராவில் இறந்ததாக ஒரு இறப்பு சான்றிதழை இளையராஜா வைத்துள்ளார், ஆனால் மற்றொரு புறம் இவர் 1944 இல் சென்னையில் இறந்ததாக வேறு ஒரு இறப்பு சான்றிதழும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உள்ளது.

நயினார் நாகேந்திரன் MLA அவர்களின் திருநெல்வேலி MLA பதவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அரசியல் அழுத்தத்தின் காரணமாக இது போல மிகப்பெரிய மதிப்பு உள்ள சென்னை நிலத்தை ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் IPC சட்ட பிரிவுகளை மீறி இது ஆவணம் பதிவு செய்யப்பட்டதாக அறிகிறோம். எனவே நயினார் நாகேந்திரன் MLA அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் பத்திரப்பதிவு துறை இருந்தால், நமது எந்த நிலங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த மோசடி பத்திரப்பதிவுகள் குறித்து அறப்போர் இயக்கம் அரசு தலைமை செயலர், பதிவு துறை அமைச்சர், பதிவுத்துறை செயலர், வருவாய் செயலர், சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளது.

அரசு இது போன்ற நிலங்களின் உண்மை தன்மையை கண்டுபிடித்து வாரிசு இல்லாத பட்சத்தில் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கி அதை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இது போன்ற நிலங்களில் ஏழ்மையில் உள்ள வீடுகள் இல்லாத எண்ணற்ற மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கலாம்.

இந்த மோசடி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு, இந்த மோசடியில் ஈடுபட்ட முகாந்திரம் உள்ள இளையராஜா, நயினார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீதும் MLA நயினார் நாகேந்திரன் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறப்போர் கோரி உள்ளது.

முக்கியமாக பள்ளிகரணை சதுப்பு நிலத்தை ராயபுரத்தில் பதிவு செய்த போதே அங்கயற்கண்ணி மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் இளையராஜா போன்றவர்கள் அதே தவறை செய்ய துணிந்து இருக்க மாட்டார்கள். ஆனால் தப்பு செய்யும் நில அபகரிப்பு குழு மற்றும் அதிகாரிகள் தொடர் விதிமீறல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் மற்றும் செயலர்கள் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி ஆவணங்களை ரத்து செய்யும்வரை, சட்டவிரோத பத்திரப்பதிவில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அறப்போர் தொடரும் என கூறியிருந்தது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்க நிர்வாகி வெங்கடேசன்,  ஜூன் 13, 2023 அன்று சென்னை காவல் ஆணையர், உள்துறை செயலாளர் உள்படப லருக்கு மனு அனுப்பினார். அதில்,  இளையராஜா,  மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜி மற்றும் பதிவு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  இருந்தார்.

அறப்போர் இயக்கத்தினரின்  மனுவை ஏற்றுக்கொண்ட  உள்துறை துணைச் செயலாளர் எஸ் சித்ரா,  இந்த  மனு மீதான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திருநெல்வேலி துணை பதிவித்துறை தலைவர்  விசாரணை செய்து, மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதால்,  இந்த பதிவை ரத்து செய்ய முகாந்திரம் இருக்கிறது என்று  அறிக்கை அளித்துள்ளார்.

இந்த அறிக்கை அளிக்கப்பட்டு, 45 நாட்கள் கடந்து விட்டது. ஆனால் இது வரை திமுக அரசு இந்த மோசடி பதிவை ரத்து செய்யவில்லை. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது FIR போடவில்லை. ஏன்? திமுக அரசுக்கும் தமிழக பாஜக MLA மகனுக்கும் என்ன டீல்? எதற்காக இந்த மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள்?

சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் துறை அதிகாரி ஜோதி நிர்மலாசாமி IAS நடவடிக்கை எடுப்பதாக சொல்லிய 15 நாட்கள் கெடு இன்றுடன் முடிவடைகிறது. பாஜக மோசடி என்றால் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதா? இந்த மோசடி பத்திரப்பதிவு குறித்து அமைச்சர் மூர்த்தி மற்றும் செயலர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் இது வரை வாய் திறக்காத மர்மம் என்ன?

இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளது.
(விரிவான தகவல்களை கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்து பார்க்கலாம்)