டில்லி

பாஜக தலைவர்களின் வீடுகளில் துப்புறவு தொழிலாளர்களுக்காக தனிக்குவளைகள் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு பெண் துப்புறவு தொழிலாளி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பிரதமர் மோடி கும்பமேளாவில் கலந்துக் கொண்டு புனித நீராடினார். அப்போது அவர் தனது பிரார்த்தனையின் ஒரு பகுதியாக துப்புறவு தொழிலாளர்களில் பாதங்களை தனது கைகளால் கழுவினார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகின. இதற்கு பாஜகவினரிடையே கடும் புகழாரம் சூட்டப்பட்டது.

பிரதமரின் இந்த செயலுக்கு பல அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாலோ துப்புறவு தொழிலாளர்கள் பாவத்தை கழுவுவதாலோ மோடி செய்துள்ள பாவங்கள் மறைந்து விடாது என குறிப்பிட்டார். அத்துடன் நாட்டில் பல துப்புறவு தொழிலாளர்கள் பிரதமர் தங்கள் கால்களை கழுவி விடுவதற்கு பதில் பாதுகாப்பு கவசங்கள் அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து டில்லியில் துப்புறவு பெண் தொழிலாளியாக பணி புரியும் பீனா என்பவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பீனா, “பிரதமர் எங்களின் கால்களை கழுவவதாக எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோவை தற்போது தான் பார்த்தேன். நான் டில்லியில் உள்ள  பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் வீடுகளில் துப்புறவு பனி செய்து வருகிறேன்.

அங்கு எங்களை சமமாக நடத்துவதில்லை.  எங்களுக்கு என தனி குவளைகள் வைக்கப்பட்டுளன. நாங்கள் சென்று வர தனி வழி அமைக்கப்பட்டுள்ளன. பாஜக டில்லி சட்டப்பேரவை உறுப்பினர் விஜேந்தர் குப்தா வீட்டிலும் இதே நிலை தான் உள்ளது.

எனது சகோதரர் இருவர் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். நாங்கள் சுத்திகரிக்க மறுத்தால் வேலையை விட்டு நீக்கப்படுவோம் என அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர்.” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.