கொல்கத்தா: இந்துக்களின் பாதுகாவலர் மகாத்மா காந்தி, ஆட்டின் பாலை குடித்ததால், இந்துக்கள் அனைவரும் ஆட்டை தாயாக கருதி, அதன் மாமிசத்தை உண்பதைத் தவிர்க்க வேண்டுமென கூறியுள்ளார் மேற்குவங்க மாநில பாரதீய ஜனதா துணைத் தலைவர் சந்திர குமார் போஸ்.

இவர் நேதாஜியின் பேரன். இவரின் வீட்டில் ஒருமுறை காந்தியடிகள் தங்கியிருந்தபோது, பாலுக்காக 2 ஆடுகள் கொண்டுவரப்பட்ட கதையை மேற்கோள் காட்டி இவ்வாறு டிவீட் செய்துள்ளார் அவர். தனது டிவீட்டில், காந்தியை இந்துக்களின் பாதுகாவலர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இவரின் இந்தக் கருத்தை மறுத்துள்ள பாரதீய ஜனதா தலைவரும், திரிபுரா மாநில கவர்னருமாகிய டதாகதா ராய், “காந்தி தன்னை ஒருபோதும் இந்துக்களின் பாதுகாவலர் என்று கூறிக்கொண்டதில்லை. நாம் பசுவைத்தான் தாயாக கருதுகிறோமே ஒழிய, ஆட்டை அல்ல.

எனவே, தேவையற்ற விஷயங்களைக் கூறி, போஸ், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.