பெங்களூரு

ர்நாடக முன்னாள் அமைச்சர் சோமண்ணா சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பாஜகவே காரணம் எனக் கூறி உள்ளார்.

நேற்று முன்னாள் கர்நாடக அமைச்சர் சோமண்ணா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சோமண்ணா,

“நான் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டேன்.அதில் ஒரு தொகுதியில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மற்றொரு தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தேன். நான் அந்த 2 தொகுதிகளிலும் எப்படி தோற்கடிக்கப்பட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

எனது தோல்விக்கு பாஜகவினரே காரணம். எனது சொந்த கட்சிக்காரர்கள் செய்த மோசடியில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. எனது வாயால் அவர்கள் யார்? என்பதைச் சொல்ல முடியாது..  பாஜக தலைமை கூறியபடி நான் சட்டசபைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டேன்.  நான் ஒருவன் மட்டுமே கட்சி கொடுத்த உத்தரவை மீறாமல் நடந்து கொண்டேன்.

நான் சட்டசபைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததை இதுவரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கு மாநில தலைவர் பதவி கொடுக்கும்படி கட்சி தலைமையிடம் கேட்டு வருகிறேன். எனக்கு மாநில தலைவர் பதவி வழங்கினால் திறமையாக நிர்வகிப்பேன்.  கர்நாடக பாஜகவுக்கு 2 செயல் தலைவர்களை நியமித்தாலும் வரவேற்பேன்.

துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சேர்ந்தவர் இல்லை. 6 கோடி மக்களுக்கும் ஆவர் துணை முதல்வர் ஆவார். அவர் பெங்களூரு நகரின் எதிர்கால வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவதை வரவேற்கிறேன். ஒப்பந்ததாரர்கள் அனைவரும் தவறு செய்திருப்பதாகக் கூறுவது சரியில்லை. உடனடியாக ஒப்பந்ததாரர்களுக்கு அரசு பணத்தை விடுவிக்க வேண்டும்.

ஒரு ஒப்பந்ததாரரை நம்பி 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பம் உள்ளது. அந்த ஏழை தொழிலாளர்கள் சொந்த ஊரான கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். பாஜக மீது குற்றச்சாட்டு கூறிய காங்கிரஸ் தலைவர்கள் எந்த ஆவணங்களையும் வெளியிடாமல் பாஜக ஆவணங்களை வெளியிடவில்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.”

என்று கூறி உள்ளார்.