ராய்ப்பூர்

விவசாயிகள் எதிர்காலத்தை வேளாண் சட்டங்கள் மூலமாக பாஜக அரசு பறிக்க விரும்புவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   டில்லியில் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் இந்த சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரிப் போராடி வருகின்றனர்.  ஆனால் மத்திய அரசு இதற்குச் செவி சாய்க்காமல் இருந்து வருகிறது.   மத்திய அரசின் இந்த போக்கைப்  பல தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

நேற்று சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு நல உதவி வழங்கும் விழா நடந்தது.  முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் நடந்த இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காணொளி மூலமாகப் பங்கேற்றார்.  இந்த நிகழ்வில் ராகுல் காந்தி உரையாற்றி உள்ளார்.

ராகுல் காந்தி தனது உரையில், “காங்கிரஸ் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.   ஆனால் மத்திய பாஜக அரசு இதற்கு நேர் மாறான பாதையில் செல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.   மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளான் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டங்களின் மூலம் விவசாயிகள் வருமானம் மற்றும் எதிர்காலத்தை பறிக்க விரும்புகிறது.  அவற்றை 2-3 பெரு முதலாளிகளிடம் கொடுக்க முயற்சி செய்கிறது.   ஏற்கனவே மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி யால் வேலையின்மை அதிகரித்துள்ளது.  ஆனால் சத்தீஸ்கர் அரசு கிராம பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.