டில்லி

ன்னை வீடியோ எடுத்த பெண்ணிடம் இருந்து மொபைலை பிடுங்கிய முன்னாள் பாஜக எம்பி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் வசிக்கும் பாஜக முன்னாள் எம்.பி. விஜய் கோயல் வடக்கு டில்லியில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறார். கடந்த ஞாயிறு அன்று வடக்கு டெல்லியின் மாடல் டவுன் பகுதியிலுள்ள பூங்காவில் தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரச்சினை தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த விஜய் கோயல் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

பலர் தெருநாய்களுக்கு உணவளித்தல் தொடர்பாகவும், தெருநாய்கள் பொதுமக்களைக் கடித்து வருவதாகவும் புகார் தெரிவித்தபோது விஜய் கோயலை கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.  விஜய் கோயல், ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே, அந்த போனை பறிக்க முயன்றுள்ளார்.

அவர் அந்த பெண்ணை அறைந்து, அத்துமீறி நடந்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த குற்றசாட்டை அவர் மறுத்துள்ளார்.  விஜய் கோயல் இது குறித்து, ”தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தோம். கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் அதை வீடியோவாக எடுத்தார்.

அப்போது ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டு அவரது போனை வாங்க முயற்சி செய்தேன்.  நான் அந்தப் பெண்ணைத் தாக்குவது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.  அப்படி எதுவுமே நடக்கவில்லை. போனில் வீடியோவைப் பதிவு செய்வதை நிறுத்துங்கள் என்று கூறியவாறே, எனது நாற்காலியில் இருந்து எழுந்து நின்றேன்” என்றார்.

தெரு நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது என்று கோயல் கூறியதாகவும், தேவையென்றால் அந்த தெருநாய்களை பொதுமக்கள் தங்களது வீட்டுக்கு கொண்டு சென்று உணவளிக்கலாம் என்றதாகவும் மாடல் டவுன் போலீஸ் நிலையத்தில் விஜய் கோயல் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.