டெல்லி: நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதுவாக பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.

மத்தியஅரசை ஆட்சி செய்து வரும், பாரதிய ஜனதா கட்சியின்  தனது தேர்தல் வாக்குறுதிகளில்  பொது சிவில் சட்டம், குடியுரிமை சட்ட திருத்தம், ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து ஆகியவை  பிரதானமாக கூறி வருகிறது. அதன்படி, காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், குடியுரிமை சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால், பொதுசிவில் சட்டத்தை இன்னும் அமல்படுத்தவில்லை. ஆனால், தேச ஒற்றுமையை பாதுகாக்கவும், பெண்களின் கெளரவத்தைப் பாதுகாக்கவும்,  பெண்களுக்கு நியாயம், நீதி கிடைக்கவும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதுகுறித்து சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருவதாக கூறி உள்ளது.

இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நெறியாளர் பொது சிவில் சட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பது ஜனசங்க காலத்தில் இருந்து மக்களுக்கு பா.ஜனதா அளித்து வரும் வாக்குறுதி. பாஜகவும், பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது.  இந்த சட்டம் குறித்து, ஜனநாயகத்தில் ஆரோக்கியமான வெளிப்படையான, ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும் என அரசு விரும்புகிறது. அந்த விவாதம் முடிந்த பிறகு அச்சட்டத்தை கொண்டு வருவோம் என்றார்.

மேலும், பொதுசிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில்,  ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்துள்ளன. அக்குழுக்கள் அளிக்கும் சிபாரிசுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொதுசிவில் சட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, பொது சிவில் சட்டத்தை பா.ஜனதா மட்டும் ஆதரிக்கவில்லை. அதை உரிய நேரத்தில் கொண்டு வருமாறு நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்களுக்கும் அரசியல் நிர்ணய சபை அறிவுரை கூறியுள்ளது. அதை எல்லோரும் மறந்து விட்டனர். நாடும், மாநிலங்களும் மதச்சார்பற்றதாக இருக்கும்போது, ஒவ்வொரு மதத்துக்கு ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் எப்படி இருக்க முடியும்?  என எதிர்கேள்வி எழுப்பியவர்,. ஒவ்வொரு மதத்தினருக்கும் நாடாளுமன்றமோ, சட்ட சபைகளோ நிறைவேற்றிய ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும் என கூறினார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்த கேள்விக்கு,   370-வது பிரிவு இருப்பதால்தான், இந்தியாவுடன் காஷ்மீர் ஒட்டிக்கொண்டுள்ளது என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால், அந்த பிரிவு நீங்கிய பிறகும், காஷ்மீர் இந்தியாவுடன்தான் உள்ளது. காஷ்மீரில் 30 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் அடிமட்டத்தில் ஜனநாயகம் வேரூன்றி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். ரூ.56 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. மிகக்குறைவான பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன என்று கூறியவர், தற்போது அங்கு  கல்வீச்சு சம்பவம் இல்லை. இவையெல்லாம் அரசின் சாதனைகள் என்றார்.

சிபிஐ, அமலாக்கத்துறைகள், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படுகிறதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு,  சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் சோதனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. யாருக்காவது குறை இருந்தால், கோர்ட்டை அணுகலாம் என்றார்.

ஆத்ஆத்மி  அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில்  சொகுசாக இருக்கிறாரே – அது தொடர்பான வீடியோக்கள் உலா வருகிறதே என்ற கேள்விக்கு, அந்த  வீடியோ உண்மையானதா என்பதை ஆம் ஆத்மிதான் சொல்ல வேண்டும். நான் சிறை சென்றபோது, மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன். ஆனால், சிறைக்கு போனபிறகும் மந்திரி பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது வெட்கக்கேடு என்றார்.

குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி. தொகுதி எண்ணிக்கை மற்றும் ஓட்டு சதவீதத்தில் முந்தைய சாதனைகளை முறியடிப்போம் என்று கூறினார்.