தெலங்கானா:

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தன்னையும் பூட்டுப் போட அனுமதிக்கக் கோரி தேர்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளர் மனு கொடுத்துள்ளார்.


தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடுபவர் அரவிந்த் தரம்பூரி.
மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அவர் அளித்த மனுவில்,நான் போட்டியிடும் நிஜாமாபாத் மக்களவை தொகுதிக்கு சமீபத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் அதற்கான அறையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்துடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கு கருவியும் வைக்கப்பட்டுள்ளது.

இவை வைக்கப்பட்டுள்ள அறைக்கு நானும் தனியாக பூட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, இது சாத்தியமில்லை. அனைத்துக் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில்தான் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லாம் ஆளுக்கொரு பூட்டை எப்படி போட முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.