சென்னை:

ரசு பள்ளி ஆசிரியர்கள் வருகை பதிவேடை உறுதி செய்யும் வகையில் வரும் ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின்  ஆசிரியர்களின் வருகை பதிவேடு  பயோமெட்ரிக் முறையில் பதியப்பட்டு கண்காணிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி யுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிக்கு சரியாக வருவதில்லை என்று ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதைத்தொடர்ந்து, ஆதார் எண்ணுடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவேடு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, தலைமையாசிரியர்களுக்க பயோமெட்ரிக் வருகை பதிவு தொடர்பான  பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகையை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், ‘‘மாநிலம் முழுவதுமுள்ள 7,726அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும், கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்துள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்களை சரிபார்த்து மீண்டும் பதிவேற்ற வேண்டும்  என்றும், இதுதொடர்பாக  மாவட்ட கல்விஅதிகாரிகள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்குவதுடன், இதுதொடர்பான பணி விவர அறிக்கையை இயக்குரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.