திருவனந்தபுரம்: தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டிய முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். கேரள முதல்வர் மற்றும் அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் சம்பாதிக்கும் முறைகேடான பணம் கேரளாவில் உள்ள பிரபல சர்ச் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளர்.  இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள  ஐக்கிய அரபு தூதரகம் மூலம்  வெளிநாடுகளில் இருந்து  தங்கம் கடத்திய வழக்கு விவகாரம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு  கைது செய்யப்பட்ட அரசுத்துறை அதிகாரியான ஸ்வப்னா சுரேஷ் 16 மாத சிறைவாசத்துக்கு பிறகு  தற்போது ஜாமினில் உள்ளார்.

இவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும்நிலையில், தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பாக இருப்பதாக குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளனர்.  இதையடுத்து, அவருக்கு மிரட்டல் வருவதாக கூறியவர்,  தனது உயிருக்கு ஆபத்து என்பதால் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், அவரின் மனைவி கமலா, மகள் வீணா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பாக தான் உண்மையை குறியதால், , முதல்வர் பினராயி விஜயன் சார்பில் தனது நண்பரான ஷாஜ் கிரண் தன்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.

இதற்கு ஷாஜ் கிரண் அதை மறுப்பு தெரிவித்த நிலையில், ஷாஜ் கிரண் தன்னுடன் பேசும் ஆடியோ ஒன்றை ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டார். அப்போது, இந்த விவகாரத்தில் முதல்வர் மகளை இழுத்ததற்காக கிரண் தன்னை எச்சரித்ததாக செய்தியாளர் சந்திப்பில் ஸ்வப்னா குற்றம் சாட்டினார். “நீ யாருடன் விளையாடுகிறாய்  என்றுதெரியுமா என்று அவர் என்னிடம் கேட்டார். இந்த வழக்கில் தனது மகளின் பெயரை இழுத்தால் முதல்வர் மன்னிக்க மாட்டார்” என்றும், தன்னை அவதூறு செய்யும் வகையில் வீடியோக்களை வெளியிடுவதாக கிரண் மிரட்டியதாகவும் ஸ்வப்னா கூறியுள்ளார்.

`எனது வாக்குமூலத்தால் ஒன்றாம் நம்பர் வி.ஐ.பி கோபமாக இருபதாக ஷாஜ் கிரண் கூறியிருந்தார். அவர் கூறிய ஒன்றாம் நம்பர் வி.ஐ.பி முதல்வர் பினராயி விஜயன்தான். முதல்வர் பினராயி விஜயன்ம் சி.பி.எம் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் இங்கு முறைகேடான வகையில் சம்பாதிக்கும் பணத்தை, கேரளாவில் உள்ள பிலிவெர்ஸ் சர்ச் (Believers church) மூலம் அமெரிக்காவில்  கொண்டு சேர்த்துள்ளனர். அதனால்தான் பிலிவெர்ஸ் சர்ச்-க்கு எஃப்.சி.ஆர்.ஏ (பாரின் காண்ட்ரிபியூஷன் ரெகுலேசன் ஆக்ட்) ரத்துச் செய்யப்பட்டது என்று கூறியவர்,  பிலிவெர்ஸ் சர்ச்சுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும்  நெருக்கமானவர்தான் ஷாஜ் கிரண்.   அவர்,  எனக்கு சிவசங்கர் ஐ.ஏ.எஸ் மூலம்தான் ஷாஜ் கிரண் அறிமுகம் ஆனார்.

லேண்ட் புரோக்கர் என தன்னைக் கூறிக்கொள்ளும் ஷாஜ் கிரண், பல கம்பெனிகளுக்கு இயக்குநராக உள்ளார். பவர்ஃபுல் மனிதரான ஷாஜ் கிரண் என்னை மனதளவில் தளர்த்த முயன்றார். நான் உயிருக்குப் பயந்துதான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தேன். என் பின்னால் வேறு யாரும் இல்லை” என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாஜ் கிரண், “ஸ்வப்னா சுரேஷ் ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். எடிட் செய்யாத ஆடியோவை நான் விரைவில் வெளியிடுவேன். எனக்கும் முதல்வருக்கும் சம்பந்தம் இல்லை” என்றார்.

மேலும் சி.பி.எம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், “முதல்வரையும், அவரின் குடும்பத்தையும் விமர்சிப்பதை லட்சியமாகக் கொண்டு ஸ்வப்னா செயல்படுகிறார். இதன் பின்னால் அரசியல் சதி உள்ளது” என்றார்.

ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கேரளாவில் போராட்டங்களை தீவிரமாக்கி வருகிறது