டில்லி

னைத்து மாநிலங்களுக்கும் இடையே உள்ள நதி நீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.

இம்முறை மோடியின் அரசில் ஜலசக்தி என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.  இந்த துறை நதி நீர் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்துக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த துறை  அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அமைச்சரவை அனைத்து மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கத் திட்டமிட்டது.

இதை ஒட்டி அனைத்து மாநிலங்களுக்கிடையே ஆன நதி நீர் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே தீர்ப்பாயம் அமைக்க ஒரு சட்ட மசோதா இயற்றப்பட்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.   இந்த  மசோதாவின் மீது இன்று நீண்ட விவாதம் நடந்தது.  குறிப்பாகத் தமிழக உறுப்பினர்கள் இந்த மசோதா மீது நீண்ட விவாதத்தில் ஈடுபட்டனர்.

தென் சென்னை தொகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழகம் போராடிப் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் நிலை என்னாகும் எனக்  கேள்வி எழுப்பினார்.  அதற்கு கஜேந்திர சிங்,”நதிநீர் பிரச்சினைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்படும் மசோதா நிறைவேறினாலும் காவேரி ஆணையம் தொடர்ந்து செயல்படும்”என அறிவித்தார்.

அதை அடுத்து இந்த மசோதாவின் மீது நீண்ட விவாதம் நடந்தது.  விவாத முடிவில் மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.