மும்பை:

மகாராஷ்ட்ர மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.


கடந்த 2008-ம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவர், வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து நீதிமன்றத்தில் பிரக்யா ஆஜராகாமல் இருந்தார். இதனையடுத்து, அவர் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியானார்.

உடல்நிலையை காரணம் கூறி பல முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார் பிரக்யா.
இந்நிலையில், நாடாளுமன்ற பணி இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி பிரக்யா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வினோத் பட்லாகர், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யா உட்பட 3 பேரையும் கண்டிப்பாக ஆஜராக உத்தரவிட்டார்.

2 பேரின் உதவியுடன் நீதிமன்ற படிகளில் பிரக்யா ஏறி வந்தார்.

நீதிமன்ற விசாரணையின்போது, 3 பேரிடமும் நீதிபதி வினோத் பட்லாகர் 2 கேள்விகளை கேட்டார்.
அரசு தரப்பில் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது என்று உங்கள் வழக்கறிஞர் கூறினாரா என நீதிபதி கேட்டார்.

எனக்கு தெரியாது என்று பிரக்யா பதில் அளித்தார்.

எனினும் இந்த வழக்கில் 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாக பிரக்யாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரியுமா என நீதிபதி கேட்க, தெரியாது என்று பிரக்யா பதில் அளித்தார்.