சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை ராஜ் பவனில் இன்று (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு மகாகவி பாரதியார் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை ராஜ் பவனில் நாளை (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு மகாகவி பாரதியார் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தமிழக அமைச்சர்கள் முன்னாள் கவர்னர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மத்திய, மாநில, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று மாலை கவர்னர் மாளிகையில் தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி தேநீர் விருந்தும் நடைபெறுகிறது. இதில், கலந்துகொள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்திருந்த நிலையில், கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக, மநீம கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.