சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையினை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களின் சிறந்த 10 படைப்புகள், ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்  இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது பரிசு தொகையினை ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுஉள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில்,  “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியிர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு நிதி (Corpus Fund) மூலம் கிடைக்கும் வட்டித்தொகையிலிருந்து 10ஆதிதிராவிடர்பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் உள்ளிட்ட 11 எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பினை தெரிவு செய்து, அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தலா ரூ.50,000 அல்லது நூல் வெளியிட ஆகும் செலவு இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான திருத்திய நடைமுறைகள் மற்றும் உதவித்தொகையினை ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.