பெங்களூரு: போக்குவரத்து மிகுந்த பெங்களூருவில், மேம்பாலம் ஒன்றில் இருந்து டிப்டாப்பான நபர் ஒருவர் ரூ.10, ரூ.200 நோட்டுக்களை அள்ளி விசியதால், அதை எடுக்க மக்கள் குவிந்தனர். இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பணத்தை அள்ளி விசிய நபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் கே.ஆர்.மார்க்கெட்டில் உள்ள மேம்பாலம் ஒன்றின் மீது நின்ற நபர் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த துணிப்பையில் இருந்து,  10 ரூபாய் நோட்டு களை கீழே அள்ளி வீசினார். நேற்று காலை 10.45 மணி அளவில்  இந்த சம்பவம் நடைபெற்றது.  அவரது கழுத்தில் கடிகாரம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. கோட் மற்றும் கால்சட்டை அணிந்த நபர் மேம்பாலத்தில் நடந்து செல்வதையும், பெரும் தொகையை காற்றில் வீசுவதையும் வாகன ஓட்டிகள் தொலைபேசியில் படம்பிடித்த வீடியோக்கள் பதிவாகியுள்ளன.

காலை நேரம் கே.ஆர் மார்க்கெட்டுக்ககு வியாபாரம் செய்ய வந்த வியாபாரிகள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் என கூட்டம் அலைமோதிய நிலையில், அந்த நபர் பணத்தை அள்ளி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்ட வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அந்த பணத்தை எடுக்க முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் அந்த நபர் மேம்பாலத்தின் மற்றொரு பகுதிக்கு சென்று அங்கிருந்தும்  ரூபாய் நோட்டுகளை கையில் அள்ளி வீசினார். இதனால் அப்பகுதியிலும் பணத்தை எடுக்க மக்கள் கூடினர். இவ்வாறு திடீரென்று வாலிபர் மேம்பாலத்தில் நின்றபடி பண மழை பொழிந்ததால், அதனை எடுக்க பொதுமக்கள் பலரும் போட்டாபோட்டி போட்டு கொண்டனர். இதனால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த கே.ஆர்.மார்க்கெட் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இது தொடர்பான  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, பணத்தை அள்ளி வீசிய நபரை   போலீசார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் அந்த பகுதியில் இருந்து எஸ்கேப்பானார். இதையடுத்து, அவரை போலீசார் தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், மேம்பாலத்தில் இருந்து பணத்தை வீசியவர் பெங்களூரு நாகரபாவியை சேர்ந்த அருண் என்பதும், இவர் தொழில் அதிபர் என்பதும் தெரியவந்தது.

இவர்,  அருண் வி டாட் 9  என்ற நிறுவனத்தை நடத்தி வருவதுடன், யுடியூப் சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார்.  இவர், அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் 10 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் என ரூ.4 ஆயிரத்தை வீசியது தெரியவந்துள்ளது.

அவர் எதற்காக கழுத்தில் கடிகாரத்தை கட்டிக்கொண்டு வந்து மேம்பாலத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்தார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து கே.ஆர்.மார்க்கெட் போலீசார் தாமாக முன் வந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக அருண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.