பெங்களூரு

பெங்களூரு நீதிமன்றம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஷ் என்பவர் சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 4-ந் தேதி (நேற்று) அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிமன்றம்  உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ஏற்பாட்டாளர் உள்பட மேலும் 3 பேருக்கும் பிறப்பிக்கப்பட்டது.  நேற்று இந்த வழக்கு நீதிபதி பிரீத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, உதயநிதி ஸ்டாலினோ அல்லது அவரது சார்பில் வழக்கறிஞரோ ஆஜராகவில்லை.

மற்ற 3 பேரின் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகி வக்காலத்து தாக்கல் செய்தனர். உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும்  இந்த சம்மனை அங்குள்ள உள்ளூர் காவல்துறை இணை ஆணையர் மூலம் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 26 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.