பெங்களூருவில் நேற்று காலை சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விமானப் படை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)வில் விங் கமாண்டராக உள்ள ஷிலாதித்ய போஸ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவுகள் 109, 115(2), 304, 324 மற்றும் 352 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

நேற்று காலை சுமார் 6 மணிக்கு ஷிலாதித்ய போஸ் தனது மனைவியும் DRDO-வில் ஸ்க்வாட்ரன் லீடராக உள்ள மதுமிதா தத்தா-வை கொல்கத்தாவுக்கு வழியனுப்ப பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார்.
DRDO குடியிருப்பில் இருந்து பயப்பனஹள்ளி வழியாக இவர்கள் சென்ற போது ஒரு இடத்தில் காரை நிறுத்தி பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் காரின் கதவை திறந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த விகாஸ் குமார் நிலை தடுமாறியதை அடுத்து இருவரையும் திட்டியுள்ளார்.
காரை ஓட்டிவந்த மதுமிதா தத்தாவும் பதிலுக்கு ஏதோ கூற, மொழி புரியாத விகாஸ் குமார் தன்னை என்ன சொல்லி திட்டுகிறாய் என கேட்க இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் சாலையில் போவோர் வருவோர் இருவரையும் சமாதானம் செய்ய முற்படும் நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பயப்பனஹள்ளி காவல்நிலையத்தில் புகாரளித்த மதுமிதா தத்தா தனது கணவர் ஷிலாதித்ய போஸை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாகவும் இதனால் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்தார்.
மேலும், தான் கொல்கத்தா செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டியுள்ளதால் இதுகுறித்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விமானப் படை அதிகாரியை தாக்கியதாக விகாஸ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அதேவேளையில், மொழி புரியாமல் ஏற்பட்ட வாய்தகராறில் இரண்டு பேர் அடித்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மீண்டும் விசாரணை நடத்திய காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் விமானப்படை அதிகாரி ஷிலாதித்ய போஸ் மென்பொறியாளர் விகாஸ் குமாரை கண்மூடித்தனமாக தாக்குவது தெளிவாகத் தெரிந்ததை அடுத்து ஷிலாதித்ய போஸ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.