மும்பை:
7வது டி,20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, லக்னோ, தர்மசாலா, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக நாளை மறுநாள் ஐசிசி ஆலோசனை நடத்த உள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கங்குலி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் யுஏஇயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் உலக கோப்பை தொடருக்கு இன்னும் 4 மாதங்களுக்கு மேல் உள்ளதால் தொடரை திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவு எடுக்க ஒருமாதகால அவகாசம் கோர முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, போட்டி தொடரை எங்கு நடத்துவது என்ற முடிவு எடுப்பதை ஒத்திவைக்க வலியுறுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.