டில்லி

பெங்களூருவை சேர்ந்த ஐ எம் ஏ நிறுவன உரிமையாளர் மன்சூர் கான் பண மோசடி வழக்கில் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிவாஜி நகரில் ஐ எம் ஏ ஜுவல்ஸ் என்னும் நிறுவனத்தை மன்சூர் கான் நடத்தி வந்தர்.   இவர் மாதத்துக்கு 2 முதல் 3 % வரை வட்டி அளிப்பதாக கூறி கோடிக்கணக்கில் முதலீடு திரட்டினார்.   இவர் திடீரென சுமார் ரூ.1600 கோடி பணத்துடன் தலை மறைவனதாக கூறப்பட்டது.  முதலீட்டாளர்கள் புகாரை ஒட்டி இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக பெங்களூரு நகர கவல் உதவி ஆணையாளர்,  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  மன்சூர் கான் துபாயில் இருந்து வெளியிட்டதாக சொல்லப்படும் ஆடியோவில் அவர் பல அரசியல் தலைவர்கள் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.   அத்துடன் சிவாஜி நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ரோஷன் பெய்க் தன்னிடம் வாங்கிய ரூ.40 கோடியை திருப்பி தராததால் தாம் தற்கொலை செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தார்.

காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே துபாயில் உள்ள மன்சூர்கானை தொடர்பு கொண்டு இந்தியா வந்து சரண் அடையக்க்கோரி எச்சரிக்கை விடுத்திருந்தது.   துபாயில் இருந்து மன்சூர் கான் டில்லி திரும்பி உள்ளார்.  அவரை இன்று காலை காவல்துறையினர் டில்லியில் கைது செய்துள்ளனர்.   அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.