அகமதாபாத்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 1 ரன் வித்தியாசத்தில், த்ரில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி. கடைசிப் பந்தில், வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, 1 ரன்னில் வெற்றியை நழுவவிட்டது டெல்லி அணி.

முதலில் ஆடிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 171 ரன்களை சேர்த்தது. பின்னர், சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியது டெல்லி அணி.

அந்த அணியின் 4 முக்கிய விக்கெட்டுகள் எளிதாக சரிந்துவிட்டபோதும், கேப்டன் ரிஷப் பன்ட்டும், ஹெட்மையரும் விடவில்லை. ரிஷப் பன்ட், 48 பந்துகளில் 58 ரன்களை அடித்து, கடைசிவரை நாட்அவுட்டாக நின்றார்.

அதேசமயம், அவரைவிட சிறப்பாக ஆடிய ஹெட்மையர், 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களை விளாசிவிட்டார். ஆனாலும், வெற்றியை மிக நெருங்கிவந்து கோட்டைவிட்டுவிட்டது டெல்லி அணி.

இந்த வெற்றியின்மூலம், புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது பெங்களூரு அணி. டெல்லியோ, மூன்றாமிடத்திலேயே நீடிக்கிறது.