புதுடெல்லி:

ஆவணங்களில் வயதை திருத்தும் வீரர்கள் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய பேட்மின்டன் தேசிய தலைமை பயிற்சியாளர் புல்லலா கோபிச்சந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வைத்துள்ள கோரிக்கையில், பேட்மின்டன்  வீரர்கள் வயதை திருத்துவது தவறான செயலாகும். இத்தகைய செயலை தடுத்து நிறுத்தவும், விளையாட தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய விளையாட்டுத் துறையில் இதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய டேபிள் டென்னிஸ் அமைப்பு இத்தகை குற்றம் இழைத்த வீரர்கள் விளையாட ஏற்கெனவே தடை விதித்துள்ளது என்றார்.

எனினும் சைய்னா நேவாளின் முன்னாள் பயிற்சியாளர் விமல் குமார், தடை விதிக்கும் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது அவர்களது திறமையை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்திய பேட்மின்டன் அசோஷியேஷன் செயலர் அஜய் சிங்கானியா இது குறித்து கூறும்போது, மக்களவை தேர்தலுக்குப் பிறகு தவறு செய்யும் வீரர்களுக்கு தண்டனை அளிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.